மும்பை, நவ.3 (டிஎன்எஸ்)
மகாராஷ்டிர முதலமைச்சர் அஷோக் சவாண் ஆளுநர் எஸ்.சி.ஜமீரை இன்று சந்தித்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் ஆளுநர் தனித்தனியே ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று 3ஆவது தடவையாக ஆட்சியைப் பிடித்தது. வழக்கம் போல காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி தேசிய வாத காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவி என்பது உறுதியான போதிலும் இலாகா பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் கடந்த 2 வாரமாக மராட்டியத்தில் புதிய அரசு பதவி ஏற்காமல் உள்ளது. இந்த நிலையில் தற்போதைய அரசின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.
இனியும் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால் என்ன செய்வது என்று மகாராஷ்டிர ஆளுநர் ஜமீர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதலமைச்சர் அசோக் சவான், துணை முதலமைச்சர் சகன்புஜ்பால் இருவரையும் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்று இன்று முதலமைச்சர் அசோக் சவான் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆளுநர் ஜமீரும், முதலமைச்சர் அசோக் சவானும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இன்றே முதலமைச்சர் துணை முதலமைச்சர் மட்டுமாவது பதவி ஏற்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)