
சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
தொடர் மழை காரணமாக தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கி கிடப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழைக்கு தண்டவாளங்களில் நீரில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்தன.
சென்னை எழும்பூருக்கு வழக்கமாக வரவேண்டிய மலைக்கோட்டை விரைவு ரயில், சேலம் ரயில் தவிர மற்ற அனைத்து ரயில்களும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன.
இதே போல திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் சென்ற ரயில்களும் இன்று தாமதமாக போய் சேர்ந்தன. ரயில் பயணிகளும் அவர்களை வரவேற்க வந்தவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதனிடையே கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியை அடுத்த கல்லிடை அருகே நள்ளிரவு 12 மணிக்கு சென்றபோது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இது பற்றி ஓட்டுனர் திருச்சி ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வழியில் நிறுத்தப்பட்டன.
சென்னைக்கு வந்த ரயில்களும், நெல்லை நோக்கி சென்ற ரயில்களும் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். தற்காலிகமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நின்றன. தண்டவாளம் சரி செய்யப்பட்ட பிறகு ரயில்கள் ஒவ்வொன்றாக இரு மார்க்கமும் புறப்பட்டு சென்றன.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)