நாகர்கோவில், நவ.4 (டிஎன்எஸ்)
வருகிற 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 கிரகணங்கள் நிகழ உள்ளன. ஜனவரி முதல்நாளான புத்தாண்டு தினத்தன்று சந்திரகிரகணமும், ஜனவரி 15ஆம் தேதி சூரியகிரகணமும் நிகழ உள்ளன.
இந்த சூரியகிரகணம் 108 ஆண்டுகளுக்கு பிறகு வரக்கூடிய ஒருகங்கண சூரிய கிரகணம் ஆகும். தமிழகத்தில் பல பகுதிகளில் இதை காணமுடியும்.
புவியை நிலவு நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3,57,200 கிலோ மீட்டர் தூரத்திலும் புவியை விட்டு வெளியில் செல்கையில் 4,07,100 கிலோ மீட்டர் தொலைவிலும் சுற்றிலும் நிலவு இருக்கும். தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்ற அளவு சற்று சிறியதாக இருக்கும்.
எனவே புவியை விட்டு விலகி செல்கையில் ஒரு சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழு மையாக மறைக்க முடியாது. அதிகபட்ச கிரகணத்தின் போது சூரியனின் வெளி விளிம்பு ஒரு கங்கணம்போல வட்டமாக ஒளியுடன் தெரியும். இதுவே கங்கண சூரிய கிரகணம் எனப்படும்.
1901 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. 108 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜனவரி 15ஆம் தேதி மீண்டும் சூரிய கிரகணம் தெரிய உள்ளது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலும் சந்திரனின் நிகழ்வின் மையப்பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு அதிகபட்ச சூரிய கிரகணத்தின்போது ஓரளவு வட்டமான வளைய வடிவில் சூரியன் தோன்றும், மேலும் கங்கண சூரிய கிரகணம் நிகழும்கால அளவு அதிகமாக இருக்கும்.
கன்னியாகுமரியில் கங்கண சூரிய கிரகணத்தை காண்பதற்கான விசேஷ ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
பின்னர் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
108 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தெரியும் கங்கண சூரிய கிரகணம் கன்னியாகுமரியில் காலை 11.04 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 3.05 மணிவரை கிரகணம் தெரியும். 1.14 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும். கண் பார்வை கூட இழக்கலாம்.
எனவே தகுந்த அறிவியல் முறைப்படி சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கன்னியாகுமரியில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு தமிழ்நாடு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உதவியுடன் கண் கண்ணாடிகள் மூலமாகவும், திரைகள் மூலமாகவும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம், கேரளா தவிர இந்தியாவின் பிறபகுதிகளில் இது பகுதி அளவில் சூரிய கிரகணமாக தெரியும். அவர்கள் சூரியனின் ஒரு பாதியை சந்திரன் மறைப்பதுபோல் இருப்பதை காண்பார்கள். சென்னையில் கிரகணத்தின் போது சுமார் 88.5 விழுக்காடு வரை சூரியன் மறைக்கப்படும்.
(டிஎன்எஸ்)
Nov 04, 2009
* Do not use semicolon(;)