"நுகத்தடி" சிறுகதை

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு மாலதி புறப்பட்டாள். மாலதி இன்று லக்‌ஷ்மிகளைக் காணப் போகும் நாள். மாதமொரு முறை இந்தப் பயணம் அத்தியாவசியமாகி விட்டது.

ரொட்டி, பழங்கள், மிட்டாய் பேக்கட், அடங்கியவை ஒரு பையில்; இவளே சமைத்ததும் கடையில் வாங்கிய உணவுப் பொட்டலங்களுமாக, நெகிழித்தாளில் அழகாக பேக் செய்யப்பட்டு, அடுக்கப்பட்ட பை, இன்னொரு கையில்; வழக்கம் போல் தோளில் தொங்கும் நீண்ட அழகுப் பை... என எல்லாமுமாக மாலதி, கணவரிடம் விடை பெற்றபோது, கேசவன் ஒரு நிமிஷம் அவளை அணைத்துக்கொண்டார். சட்டென்று அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது.

வழக்கமாகச் சொல்லும் "பத்திரமாகப் போய் வா," எனும் தாரக மந்திரத்தை ஏனோ கேசவன் சொல்லவில்லை. 'எனக்குத் தெரியும். நீ பத்திரமாய்  வருவாய்!' என்பது போல் தான் விடை கொடுத்தார். ஏனோ விடை பெறுவதற்கு முன்னர், ஹாலில் தொங்கிய மணிக்கூண்டு அலாரத்தை ஏறிட்டு நோக்கிய போதுதான், அது நின்றுபோய் மூன்று நாகளாகிவிட்டது அவளுக்கே நினைவுக்கு வந்தது. அதைப் பற்றிச் சிந்திக்கக்கூட நேரமில்லாமல், அவசரம் அவசரமாக, வெளியேறினாள்.

டேக்ஸி பிடித்து,  உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியருகே வந்தபோது வசந்தி காத்திருந்தாள். வசந்தி, சிங்கை சாங்கி விமான நிலையத்தில், வேலை செய்பவள். ஜொகூர்பாருவிலிருந்து தினமும், சிங்கப்பூருக்கு இரவு வேலைக்கு வந்து, மறுநாள் வீடு திரும்பும் நேரம், இது தான்.

இந்த நேரத்துக்குள் மாலதி வந்து சேர்ந்தால், வசந்தியுடன் போகலாம். இவளது பைகளைத் தூக்கவும், சுங்கச் சாவடி பரிசோதனை முடிந்து,  டாக்சி பிடித்து, மருத்துவமனை வரை, உடன்  வரவும்  வசந்தி உதவுவாள். பின் இவளை இறக்கி விட்டு விட்டு, அதே டேக்ஸியில் சில கிலோமீட்டரே அருகே உள்ள அவளது வீட்டுக்குப் போய் விடுவாள்.

மாலதியின் கையிலிருந்த பாதி பாரம் வசந்தியின் கைக்கு மாற, புதிய இமிகிரேஷன் அலுவலகத்தின் நீண்ட, நெடிய பாதையில் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

சனிக் கிழமையாதலால், கூட்டம் நெட்டி முறிந்தது. மலேசியாவிலிருந்து வேலைக்கு வந்து திரும்புபவர்களும், வார இறுதியில், மனைவி, குழந்தைகளைக் காண ஆவலோடு  ஓடும், மலேசியர்களும் சிங்கையிலிருந்து இவளைப் போல் காரண காரியத்துக்காகப் போகிறவர்களுமாக, ஓட்டமும் நடையுமாக, மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

கைப் பாரமும், கியூவின் அலமலப்பும் கால்வலியும் எதுவுமே பொருட்டாகத் தெரியவில்லை. இரண்டு சுங்கப் பரிசோதனையும் கடந்து, ஜோகூர்பாரு டேக்ஸி ஸ்டாண்டை அடைந்தபோது, இருவருமே வியர்த்து, விறுவிறுத்துப் போனார்கள்.

வசந்தி ஓடிச்சென்று, எதிரிலிருந்த இந்திய உணவகத்திலிருந்து, 2 பெரிய உணவுப் பொட்டலங்களை, கறி, கூட்டு, குழம்பு, சாம்பார், ரசம், மோர், என அவள் சார்பாக வாங்கி வர, டேக்ஸி ஓட்டுநர், இந்தியர்  கேட்டார்.

"எங்கே போகணும்மா?"

மாலதி இடத்தைச் சொல்ல, ஒரு வினாடி இவளை ஏறிட்டு நோக்கினார். ஏதோ கேட்க முற்பட்டு, பின் என்ன நினைத்தாரோ, கேட்க வந்ததை அப்படியே நிறுத்திக்கொண்டு வண்டியை ஓட்டத் தொடங்கினார். கண்களை மூடி மாலதி, காயத்ரி சொல்லத் தொடங்கினாள். இறங்கும் ஸ்தலம் வந்தபோது வசந்தி தொட்டுலுக்க, மாலதி டேக்ஸி ஓட்டுநருக்குப் பணம் கொடுக்கும் நேரத்தில், எல்லா பைகளையும் வசந்தி, வண்டியிலிருந்து கீழே பொறுப்பாய் இறக்கித் தர, இப்பொழுது தான் மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது.

இது சில மாதங்களாகவே வசந்திக்கும் இவளுக்கும் இடையே நிகழும் அன்பின் உடன்படிக்கை. வசந்தியும் டேக்ஸியும் கண்ணிலிருந்து மறைய, மருத்துவமனை அலுவலகத்தினுள் நுழைந்து, அடையாள அட்டையைக் காண்பித்து, வார்டு எண்ணின் நுழைவுத் தாளை வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

உள் நுழைவு வாசலை அடைந்தபோது, அங்கும் கேள்விகள்! நுழைவு அனுமதித் தாளைக் காண்பித்து, அனுமதி கிட்ட, மீண்டும் நடந்தாள். இதுவும் கூட ஒரு நீள்வழிப் பாதை தான். ஒவ்வொரு வார்டாகக் கடந்து போகும்போதும், கம்பி போட்ட ஜன்னல் வழியாகத் தெரிந்த கோப முகங்கள், எரிச்சல் முகங்கள், கோபத்தில் கையை வீசிக் காட்டும் முகங்கள்... என எல்லாம் கடந்து, கடந்து, [!!!!----???----] எண் குறியிட்ட குறிப்பிட்ட வார்டுக்குள் நுழைந்தபோது, பணியாட்கள் வார்டைக் கழுவிக்கொண்டிருந்தார்கள்.

இவள் காணப் போயிருந்த லக்‌ஷ்மிகள் யாரையுமே காணோம். எல்லோருமே தொலைக்காட்சி பார்க்கும் அறையில் குழுமியிருந்தார்கள். [அல்ல, அங்கு இருத்தப்பட்டிருந்தார்கள்]. தலைமை தாதியிடம் அனுமதி அட்டையைக் காண்பிக்க, சிலர் முதலில் வெளியே வர அனுமதிக்கப்பட்டார்கள். வார்டுக்குப் பின்னால் இருந்த உணவுக்கூடத்தின், வரிசை வரிசையான பெஞ்சில், அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, வட்ட மேசை மேல் நிரப்பி வைக்கப்பட்டிருந்த, தட்டு, குவளைகளில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வந்து, மேஜையில் நிரப்பி, ஒவ்வொரு தட்டாகப் பரிமாறினாள். உணவுப் பார்சல்களைப் பிரித்தும், டப்பர் வேரிலிருந்தும், எடுத்துப் பரிமாறினாள். அவரவர் பங்கை, வேகமாக, கிட்டத்தட்ட, பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டார்கள்.

பொறுமையாக, நிதானமாகச் சாப்பிடவில்லை. நிமிஷத்தில் தட்டு காலியாக, "அக்கா! லெட்சுமிக்கு மட்டும் கூட குடுத்தே!?" இது ஒரு முறையீடு.

கிணுக்கிச் சிரித்தாள், இன்னொரு லக்‌ஷ்மி. "அதுக்குப் பைத்யம், நீ அது கிட்டெ பேசாதே!"

முதல் ஈடு முடிந்துவிட்டது. அடுத்தது [கடையில் வாங்கிய] சாடின் குழம்பும் ரொட்டி[பிரெட்]யும். இதற்குள் வேறு சிலரும், தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு, ஜன்னலூடே நோக்கியதில், தட்டுகள் கண்ணில் பட, தாமாகவே வந்து விட்டார்கள். சாடின் குழம்பும் பிரெட்டுமாக, அவர்களை வரிசைப் படுத்திவிட்டு தட்டை நீட்ட, 'சூ!' என்று ஒரே நிமிஷத்தில் தட்டு காலியாகிவிட்டது. யாருக்குமே போதவில்லை, என்பதை முகத்தின் வெறுமையே அறைந்து சொல்லியது.

கொண்டு போன பிரெட் சுத்தமாய் முடிந்துவிட்டது. ஆனால் பெரிய பெரிய பிஸ்கட் பொட்டலம், 2 இருந்தது. அதே தட்டில், பிஸ்கட்டும் மீதமிருந்த சாடின் குழம்பும் பரிமாற, நிமிஷத்தில் அதுவும் காலியாகிவிட... இப்பொழுது ஜூஸ். ஆரஞ்சு ஜூசும், இவளே தயாரித்த எலுமிச்சை ஜூஸும், குவளைகளில் மாறி மாறி, ஊற்றிக் கொடுத்தாள். இப்பொழுது லக்‌ஷ்மிகள் சற்று நிதானப்பட்டிருந்தார்கள்.

"அக்கா! ஜூஸ் தாங்கா நல்லா இருந்திச்சி,!"

"ரொம்ப நல்லா இருக்குக்கா, இங்கே கேண்ட்டீன்ல வாங்கினியா?"

"ரே ரே ரே ரே ரே!" என்று திடீரென்று ஒரு லக்‌ஷ்மி, வானை நோக்கி கூவினாள்.

"ஹ்யாங்! ஹியாங்! ஹியாங்!"என வாய் பேச முடியாத, செவியும் கேட்காத, இன்னொரு லக்‌ஷ்மி கத்தினாள்.

இதற்குள் தொலைக்காட்சி அறையிலிருந்து மீதமிருந்தவர்களும் கூட வந்து விட, வசந்தி வாங்கித் தந்த பொட்டலத்தைப் பிரித்தாள். வீட்டிலிருந்து இவளே சமைத்த, அவியலும் எரிசேரியும், புளி இஞ்சியும், தக்காளி சாதமும் பிரித்து வைத்தாள். ஒவ்வொரு தட்டிலும் பகுத்துப் பகுத்து, பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.

"அக்கா! எங்களுக்கு  இதெல்லாம் குடுக்கலியே?"

"ஆனாலும் சாப்பிட்டாச்சே? கொஞ்சம் கூட சாப்பிடாதவர்களுக்குத் தான் இதைக் கொடுக்கணும்"

கேள்வி கேட்ட லக்‌ஷ்மியின் முகம் விழுந்து போனது. வருத்தத்தோடு தூரப்போய் நின்று கொண்டாள். மற்றவர்கள் போகவில்லை. வளைந்து சுற்றி  நின்று கொண்டு, 3ஆவது செட், லக்‌ஷ்மிகள் சாப்பிடுவதையே, பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"சுக்குப்! சுக்குப்! சுடா பாஞாக்!" என்று சொல்லிய சீன லக்‌ஷ்மி, பாதி சாப்பாட்டிலேயே எழுந்து கொள்ள, சடாரென்று அந்த உணவை, மலாய் லக்‌ஷ்மி, தட்டோடு எடுத்துக்கொண்டு போய், நின்ற நிலையிலேயே சாப்பிடத் தொடங்கினாள்.

எல்லாமே முடிந்து விட்டது. மிட்டாய் பாக்கெட் மட்டும் தான் பாக்கி. வருத்தப்பட்டுக்கொண்டு தூரப்போய் நின்று கொண்டிருந்த லக்‌ஷ்மியை, அழைத்து மிட்டாயை நீட்ட, "ரொம்ப நன்றிக்கா!" என்று வாங்கிக் கொண்டாள். மீதமிருந்ததை யாருக்கும் கொடுக்கவில்லை. மேஜையில் வைத்துவிட்டாள். வேண்டியவர்கள் எடுத்து சுவைக்கட்டும், என்று நினைத்து முடிக்கு முன்னே, தள்ளுமுள்ளு,! மிட்டாய் பாக்கெட் போன இடம் தெரிவில்லை.

ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், எல்லாம் முடிந்து, மொடா மொடாவாய், பைப்பிலிருந்து, தண்ணீர் பிடித்துக் குடித்தார்கள். சாப்பிட்ட தட்டு, குவளைகளை எல்லாம் அப்படி, அப்படியே போட்டுவிட்டு, பலரும் வந்த வேகத்திலேயே போக, 5 லட்சுமிகள் மட்டும் அத்தனை தட்டுகளையும் வாஷ்  பேசினில், கொண்டுபோய்ப் போட்டுவிட்டு, கைகளையும் கழுவிக்கொண்டு இவள் அருகே வந்து அமர்ந்து கொண்டார்கள்.


"அக்கா! நீ, அடுத்தவாட்டி வரும்போது, லட்சுமி இங்கே இருக்க மாட்டேன். எங்கண்ணன் வந்து என்னைக் கூட்டிப் போயிடும். அப்றம் நீ, லட்சுமி, லெட்சுமின்னு தேடிக்கிட்டிருக்காதே?? என்ன? சரியா?" ![சென்ற முறை சென்றபோதும் இதையே தான் சொன்னாள்.]

சொல்லிவிட்டு, வாயைக் கை கொண்டு மூடிக்கொண்டு, கறை படிந்த பற்களால் குப்பென்று சிரித்தாள். அதற்கு மேலும் சகிக்காமல், இன்னொரு லக்‌ஷ்மி, "ஏங்கா, வேறொண்ணும் எங்களுக்காகக் கொண்டாரலியா?" என்று  கேட்க, மாலதி, கொண்டு போயிருந்த கலர் வலையல்கள் இரண்டு  செட்டைப் பிரித்து எல்லோருக்கும் போட்டு விட்டாள்.

முகமெல்லாம் மகிழ்ச்சியோடு, குள்ளமாய , குண்டாயிருந்த லட்சுமி, "அக்கா! அக்கா!, சின்ன தோடுக்கா! சின்ன சின்ன ஒரு தோடுக்கா! ஒரே ஒரு தோடுக்கா! பெரிசு வேண்டாங்கா! பெரிசு மட்டும் நீ கொண்டந்தே, நான் வாங்கிக்கவே மாட்டேன். சின்னது போதுங்கா! அடுத்த வாட்டி வரும் போது வாங்கியாறியாக்கா?" என்றாள்.

இப்படிக் கேட்ட இந்த லெக்‌ஷ்மியை இப்பொழுதுதான் பார்க்கிறாள். புதுசாய் வேறு வார்டிலிருந்து வந்திருக்கிறாள். கூந்தலை கோணா மாணாவென்று சொருகி, கழுத்தில் மங்கிய நீலக்கல் பாசிமாலை அணிந்திருந்தாள்.

"தோடு கேட்டேனு சொல்லிச் சொல்லியே என்னை மாடு மாறி அடிச்சாங்கா? எங்கண்ணு முன்னாலேயே, அவளை --------------------------------!, ரெண்டும் எப்பவும் கட்டிப் புடிச்சுட்டுத் தாங்கா கிடக்கும். வெக்கம் கெட்டதுங்கக்கக்கா! அக்கா! எனக்கு ஒரே ஒரு தோடு மட்டும் வாங்கித் தாக்கா!"

"சரிம்மா! அடுத்த முறை வாங்கி வறேன்."

சதா பிருஷ்டத்தைச் சொறிந்துகொண்டும், குறுகுறுவென்று இவளையே பார்த்துக்கொண்டே சிரித்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் நடந்த பெண்களைப் பார்க்கப் பார்க்க, மாலதிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது துக்கம்.

நீட்டக் கரிமணி மாலை, கலர் மோதிரங்கள், புதிதாய் வந்திருக்கும் வெள்ளைக்கல் அணிகலன்கள் எனக் கொண்டு போயிருந்த அனைத்தையும் இவள் கையாலேயே, போட்டு விட்டாள்.

எதுவுமே தங்கம் அல்ல.; ஆனால் வெறும் மலிவு விலைப் பொருட்களும் அல்ல. என்றாலும் தேடித் தேடி வாங்கிய பொருட்கள். இவர்கள் மகிழ்ச்சிக்காகவே பார்த்துப் பார்த்து வாங்கிய அணிகலன்கள். விலை கூட எல்லாமாகச் சேர்த்தாலும் கூட குறிப்பிட்ட தொகையே வரும். ஆனால் லக்‌ஷ்மிகளின் முகத்தில் காணும் இந்தப் பரமானந்தத்தை எங்கேயுமே காண முடியாது.

இங்குள்ள இந்திய லக்‌ஷ்மிகள் எல்லோருமே, கை நிறைய கலர் வளையல்கள் போட்டிருந்தார்கள். எல்லோருடைய கழுத்திலும் சொல்லி வைத்தாற்போல் ஏதாவது பாசிமணி மாலை, தொங்கியது.

மருத்துவமனை உடையைத் தவிர வேறு எதையுமே அவர்கள் அணியவில்லை. கனத்த முலையும் பெருத்த வயிறும் உள்ளாடை அணியாத சுதந்திரமுமாய் நடமாடுகிறார்கள். எது கொடுத்தாலும் சாப்பிடுகிறார்கள். ரசித்து அல்ல, ருசித்தும் அல்ல.. உணவு, உணவு மட்டுமே, இனி இவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருக்கிறது.

உணவு, தூக்கம், இப்படித் தூங்கித் தூங்கியே இவர்கள், தடித்துக் கிடக்கிறார்கள். வெளியுலகம் என்பதே இனி இல்லை என்பது கிட்டத்தட்ட முடிந்து போன முடிவாகி விட்ட அவலம். பார்க்க வரும் உறவினர்களும் கூட இவர்களுக்கு இல்லை. எல்லோருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள். கணவனால், அண்ணன், தம்பிகளால், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.. ஒரு சிலருக்கு மட்டும் வயதான பெற்றோர்கள், எப்போதாவது வந்து போவார்கள். அது கூட எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒரு முறை.

"எப்படி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறது? போனா இதுங்க அடங்கி இருக்குமா? கீலா [மன நிலை பிழறிய] புடிச்ச உன் தங்கச்சி, அங்கேயிருந்து போற வரைக்கும்  வீட்டுக்கே வர மாட்டேன்னு எம் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போயிட்டா? என்னை என்ன செய்யச் சொல்றீங்க?"

பலரின் குமுறலும் குற்றச்சாட்டும் இப்படித்தான் இருக்கிறது! என்கிறார் மூத்த தாதியொருவர்.

கணவன்மார்கள் மறு கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அண்ணன்மார்களுக்கோ அவமானம். பெற்றவர்கள் மட்டும் தான் மனசு கலங்கி வீட்டில் குமுறிக் கொண்டிருப்பார்களோ? இது யாரிட்ட சாபம்? மன நிலை ஏன் பிழறுகிறது? எவ்வளவு காலத்துக்கு இவர்கள் இந்தக் கர்மாவை அனுபவிக்க வேண்டும்?

மாலதி முதன் முதலாக இங்கு பார்வையிட வந்ததே ஒரு விபத்து.

குறும்படம் ஒன்றுக்குக் கதை கேட்டபோது, ரியலிஸம் தான் வேண்டும் என்று டைரக்‌ஷன் குழு தீர்மானிக்க, அனுமதி பெற்று, இவள் கணவரோடு பார்க்க வந்தாள். வந்த அன்றே அதிர்ச்சி, அழுகை, விவரிக்க இயலா வேதனை எனக் கலவையில் உறைந்து போனாள். பல நாட்களுக்கு இங்கு சந்தித்த பெண்களின் முகங்களை மறக்கவே முடியவில்லை.

சல்லிக் காசு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் விழா எடுத்தல், விருந்து, கேளிக்கை, உல்லாஸப் பயணம் என, எதற்கெல்லாம், எதெதுக்கெல்லாமோ பணம் செலவழிக்கிறோம். சர்வேஸ்வரனைக் காண கோயிலுக்குச் சென்றால் தானா? ஈஷ்வரன் உண்டெனில், அம்பிகை விஸ்வரூபமெனில், இந்த லக்‌ஷ்மிகளின் கர்மாவுக்கு என்று தான் தாக ஷாந்தி?

ஏன்? ஏனிவர்களுக்கு மட்டும் இந்தத் துன்பம்? ஒரு நாள், ஒரே ஒரு நாளாவது, சில மணி நேரங்களையாவது, இவர்களுக்காக ஒதுக்க மறுக்குமளவுக்கு, வெறுப்பை ஏன் இவர்கள் சம்பாதிக்கிறார்கள்? அதீத மன உளைச்சல் மட்டும் தானா, இவர்கள் மன நிலை பிழறக் காரணம்?  ஆய்வுகளில் கூட மருத்துவர்களால் தக்க காரணம் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் உலகப் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள், மன நோயாளிகளாக இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் இந்தப் பேதை லக்‌ஷ்மிகளுக்கு, அபலை லக்‌ஷ்மிகளுக்கு மட்டும் என்று விமோசனமே இல்லையா?

நெஞ்சை அடைத்த துக்கத்தோடு, மாலதி அங்கிருந்து வெளியேறும்போது, கனத்த லக்‌ஷ்மி ஓடி வந்தாள். ஓடி வந்ததில் மூச்சிறைத்தது. மார்பு குலுங்கியது.

"அக்கா! ஒரு வெள்ளி இருந்தால் குடுக்கா! ஐஸ் தண்ணி வாங்கிக் குடிக்கணும்."

கொடுத்து விட்டு ரெண்டடி வைத்திருக்க மாட்டாள்.

"அக்கா! அக்கா! தோடு  கேட்டேனே? மறந்துடாதேக்கா! ஒரு தோடுக்கா, சின்ன........ சின்னத் தோடுக்கா! சின்னத் தோடு போதுங்கா! மறந்துடாதேக்கா!" சட்டை பித்தான் கழன்று, முலைக் காம்பு தெரிய... பிதுங்கி வழிந்த சதைக் குமிழைப் பற்றிய பிரக்ஞை கூட இன்றி,
சின்னத் தோடுக்காக, இந்த லக்‌ஷ்மி ஓடி வந்திருக்கிறாள்.

ஆனால் மாலதிக்குச் சகலமும் பதறியது. அவள் சட்டைப் பித்தானை ஒழுங்காக்கிவிட்டு, "அவசியம் கொண்டு வறேன் லக்‌ஷ்மி!" என்று உறுதி கொடுத்துவிட்டு, திரும்பியும் பார்க்காமல் நடந்தபோது, அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த வேதனை, கண்கள் வழி பொத்துக்கொண்டு வழிந்தது.

மருத்துவமனை வாசலுக்கு வந்தால் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

மாலதியைக் கொண்டு வந்து விட்ட அதே டேக்ஸி  ஓட்டுநர், "ஏறுங்கம்மா!" என்று கதவைத் திறந்துவிட்டார்.

"உங்க கூட வந்த அந்தப் பொண்ணு தான் இந்த நேரத்துக்கு நீங்க வந்திடுவீங்கண்ணு சொன்னாங்க! ஆளுங்களை ஏத்திக்கிட்டு, இங்கேயே தான் சுத்திக்கிட்டிருந்தேம்மா!" என்றார்.

சுங்கச் சாவடியருகே கொண்டு விட்டு கார் கதவைத் திறக்க, இவள் பணத்தை நீட்டினாள்.

"வேண்டாம்மா! தயவுசெய்து காசு தராதீங்க! இந்தப் பணத்துக்கு, ஆஸ்பத்திரியில உள்ளவுங்களுக்கு ஏதாவது வாங்கிக் குடுங்கம்மா!" என்று கையெடுத்து அவர் கும்பிட, இவளால் பேசவே முடியவில்லை. கண்ணீர் கண்ணீராய் வந்தது.

வழியெல்லாம் "அக்கா! தோடுக்கா!" என்ற குரலே இம்சை செய்து கொண்டிருந்தது.

சுங்கச் சாவடியின் அத்தனை படிகளும் ஏறி இறங்கி, பாஸ்போர்ட் சிருங்காரமும் முடிந்து, வீடு வந்து சேர்ந்தபோது, மிகவும் தளர்ந்து போனாள். கணவர் அவள் பைகளை வாங்கிக்கொண்டார். குளித்து, பூஜை முடித்து வந்தபோது, பசித்தது. அகோரமாய்ப் பசித்தது. காலையிலிருந்து அவள் எதுவுமே சாப்பிடவில்லை. அதுவும் இது போன்ற இடங்களுக்குப் போவதென்றால் ஜலபானம் கூட அருந்துவதில்லை.

இதை ஒரு, ஜெபமாக, தியானமாகவே கொண்டிருந்தாள். கணவர் 'ஸ்ட்ரா பெர்ரி' பாலை ஸ்ட்ரா போட்டுக்கொண்டு வந்து, "முதலில் இதைக் குடி,! பிறகு சாப்பிடலாம்!' என்றார். [கணவருக்கு காப்பி, சாயாகூடப் போடத் தெரியாது.}

இவளுக்கு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல், மனசு பரிதவித்தது.

"வேண்டாம், பிறகு பேசலாம்! முதலில் பாலைக் குடி" என்று மீண்டும் சொல்ல, அப்படியே அவரைக் கட்டிக்கொண்டு, "லக்‌ஷ்மிகள்! லக்‌ஷ்மிகள்!" என்று விம்மி விம்மி அழுதாள்.

அப்பொழுது சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் டாண் டாணென்று அலற, மாலதி எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.
 
[முற்றும்]

Sep 26, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

THULA THULA : A busy day where you would be meeting influential people and having discuss...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:33 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.