
கவியோகி வேதம்
மிகச் சிறந்த காந்தியவாதியும், ராமாநந்த சாகரின் இராமாயணத்தை மிக அற்புதமாகத் தமிழில் மொழிபெயர்த்து, தொலைக்காட்சித் தொடராக வெளிவரக் காரணமாக இருந்தவரும் குற்றாலத் தேன் குரலில் 'பாரதியே ஒரு பாரதம்', 'கண்ணாமூச்சி ஆடுகிறான் கண்ணன்' போன்ற காலத்தால் அழியாத பாடல்களை இயற்றிப் பாடியவரும் மிக நல்ல அன்பு குணம் கொண்ட கவிமாமணி தேவநாராயணன், 07.09.2009 - திங்கள் அன்று மாலை மயிலையில் உள்ள தம் வீட்டில் காலமானார். அப்போது அவருக்கு வயது 84. அவரது பிறந்த தேதி: 14.01.1925.
கனடா பல்கலைக்கழகப் பேராசிரியர் கவிமணி பசுபதி, திரட்டிக் கொடுத்துள்ள தகவலின்படி கவிஞர் தேவநாராயணன் பற்றிய சில முக்கிய தகவல்கள்:
"காரைக்குடியில் படிக்கும்போதே 1937இல் கவிஞர், சினிமாவில் நடிக்கச் சென்றார். 'கிருஷ்ணன் தூது' படத்தில் 'கர்ணன்' வேடம். அதன் பிறகு இடைவெளி. பிரபலமான 'சபாபதி'யில் நடித்தார். பின்பு சுமார் 500 படங்களுக்கு - தமிழ் மொழிமாற்ற உரையாடல் எழுதித் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு, சில படங்களில் 'குரல்' (டப்பிங்) கொடுத்துள்ளார்.
'கோதையின் கதை' தொலைக்காட்சித் தொடர் (பொதிகை), இவர் படைப்பு. 'நீலக்குயில்' திரைப்படம், ஏ.வி.எம் விநியோகித்தது. இவரே அதை முழுக் கவனமும் செலுத்தித் தயாரித்து அது பிரமாதமாக ஓடி, குடியரசுத் தலைவர் பரிசும் பெற்றது.
இவருடைய சில நூல்கள்: 'இராமாயணச் சிந்தனைகள்' என்ற பொதுத் தலைப்பில் 1.அகல்யை, 2.கைகேயியின் கண்மணி ஸ்ரீராமன், 3.அமுதன் வழங்கிய ஸ்ரீராம பாதுகை என்று மூன்று நூல்கள் (திரு.கார்த்திகேயன், LKM Publishers, திநகர், சென்னை மூலம்) வெளிவந்துள்ளன. இவை 'ஆன்மிகம்' இதழில் (மயிலையிலிருந்து இது இன்னும் வெளிவருகிறது) மாதத் தொடர்களாக வந்தன. தம் இறுதிக் காலம் (செப். 2009) வரை இதில் எழுதி வந்தார் தேவநாராயணன்.
ஒரு பிரபல (கழக) ஆண்டு விழாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு கவிஞரின் கவிதையைக் கேட்டுவிட்டு, அந்தக் கழகத் தலைவர் எழுந்து பலரது மனத்தை உறுத்தும் வகையில் அக் கவிதையைப் பற்றிப் பொதுவாகச் சில வார்த்தைகள் சொன்னார். பாரதியின் கருத்துக்கு அக்கவிதை நேர் விரோதம். அதனால் தலைவர் கோபமுற்று அப்படிச் சொல்ல நேர்ந்தது.
ஆனால், யாரும் இதை மறுத்துப் பேசவில்லை. துணிவும் இல்லை. ஆயின், நம் கவிமாமணி தேவநாராயணன் பாட எழுந்தவுடன், தமது பாடலைப் பாடுவதற்கு முன், கம்பீரமாக, ஆனால் எவர் மனமும் புண்படாத வகையில், அதே சமயம் மிகவும் உறுதியுடனும், தலைவரின் மொழிகளை முற்றும் நிராகரித்துப் பேசிய அழகிய துணிச்சலான பாங்கு, என்னை மிகவும் கவர்ந்தது.
தேவநாராயணனுடைய பிரபலமான ஒரு பாடலின் முதல் சில வரிகள்:
பாரதியே ஒரு பாரதம்!- அவன்
பாட்டெல்லாம் தமிழ் மாருதம்!
பாரத மண்ணின் காவிய வளம்தான்
பாரதி தோன்றக் காரணம்!
'சிந்து பைரவியில்' அவர் பல தடவை இனிமையாகப் பாடிய குரல், இன்னும் என் மனத்தில் ஒலிக்கிறது. அவர் மறையவே இல்லை என்று உள்ளுக்குள் அழுகின்ற என் தாபக் குரல் சொல்கிறது. என்னைப் போலவே இருக்கும் கவிஞர்கள் பலருக்கும்!
(டாக்டர் பசுபதி, கனடா)..........
Sep 30, 2009
* Do not use semicolon(;)