
அமரர் வெங்கட். தாயுமானவன்
தேர்தல் முடிவுகளோடே.. தேர்வு முடிவுகளும் வந்துவிட்டது. அதில் ஜெயித்தவர்களுக்கு ஆட்சி அமைக்கும் பாடு. இதில் ஜெயித்தவர்களுக்கோ.. அடுத்த என்ன படிப்பது என்ன செய்வது என்கிற பாடு. ஆக எந்த ஒரு வெற்றிக்கு பின்னாலும்கூட செய்யவேண்டியது எது எனும் பதற்றம் இருக்கத்தான் செய்கிறது.
சரி.. நாம் தேர்தல் முடிவு சம்பந்தமாக இங்கு பேசப் போவதில்லை. தேர்வில் ஜெயித்தவர்களைப் பற்றியும் பேசப் போவதில்லை. மாறாக +2 தேர்வில் தோல்வி உற்றவர்கள் என்ன செய்யலாம் என பார்க்க இருக்கிறோம்.
தேர்வில் தோல்வி கண்டவர்கள் சிறுபான்மையினர் என்றாலும்.. அரவணைப்பும்.. சரியான வழிகாட்டுதலும் தேவைப்படுவது இவர்களுக்குதான் என்பது என் கருத்து.
நம் ஆய்வில் ஒரு பாடத்தில் தவறி பின் அதைத் தனித் தேர்வராக எழுதி அதன் பின் கல்லூரியில் சேர முயற்சிக்கும் மாணவ மணிகளையும் எடுத்துக்கொள்ளப் போவதில்லை. படிப்பில் பிந்தி, அதிக மதிப்பெண்களும் பெறவியலாமல், முக்கியமான பாடங்களில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் தோல்வி ஏற்பட்டு அடுத்து தமக்கு வாழ்வே இல்லையோ என கூனிக் குறுகிப் போகும் மாணவர்களை இலக்காக வைத்து இக்கட்டுரை தன் அடுத்த வரிகளுக்குப் பயணிக்கிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு அவர்தம் பாடப் பிரிவுகளுக்கேற்ப முப்பது வகையான பட்டப் படிப்புகள் உள்ளன. தோல்வி அடைந்தவர்களுக்கு டுடோரியல் கல்லூரிகளை விட்டால் வாழ்வில்லை எனும் நிலை மாறி உள்ளது. சமூக, பொருளாதார, குடும்ப சூழலின் அழுத்தம், கல்வியில் இயல்பான நாட்டமில்லாத உளவியல் பாங்கு போன்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு, கல்வியில் மட்டும் ஒளிராமல்போய் வியத்தகு தனி திறமைகளை தம் வசம் வைத்திருக்கும் மாண்வர்கள் அனேகம்.
உதாரணத்துக்கு தேர்வில் ஒரு மாணவன் படுதோல்வி அடைந்தான். அவனால் தவறிய பாடங்களைக்கூட எழுத மனம் துணியாத நிலை. பயம் ஒரு பக்கம் , தன்னோடே படித்த சக மாணவர்கள் பொறியியல், மருத்துவம் என பயணிக்க தான் மட்டும் ஏதோ ஒரு மூலையில் தேக்கமடைந்த அவமானம். குடும்பத்தினரின் தவறான அணுகுதல், இவையெல்லாம்..ஒரு மாணவ உள்ளத்தை தவறான பாதையில் கொண்டு செலுத்தும் வாய்ப்புள்ளது கண்கூடு.
இப்படி வாய்ப்புகளைப் புரிந்துகொள்ள முடியாத மனோநிலையில் வாழ்கையின் இருள் பகுதிக்கு அவர்களும் சென்றுவிடக் கூடாது அல்லவா..? இம்மாதிரியான நிலையில் உள்ள மாணாவர்கள் கிராமம் சார்ந்த பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள். நகரங்களிலும் இருக்கிறார்கள். இவர்களை மீட்டெடுத்து மீண்டும் முறையான கல்விக்கு உட்படுத்தி வெற்றியாளர்களாய் மாற்ற வாய்ப்பு உள்ளதா..? உள்ளது.. என்பதை சொல்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாக நான் நினைக்கிறேன்.
அந்த கலங்கரை விளக்கம் நம் இந்தியாவில் இப்போது இம்மாதிரியான மாணவ சமூகத்தை மீட்டெடுக்கும் வகையில் பெருகிவரும் "சமுதாய கல்லூரிகள்" பணியாற்றி வருகின்றன. தமிழகம் முழுக்க ஏறக்குறைய 350 கல்லூரிக்களுக்கும் மேல் இப்போது செயல்பட்டு வருகின்றன.
தோல்வி கண்ட மானவர்களுக்கான சரணாலயங்கள் இவை. சமுதாய கல்லூரிகள் என்ன செய்கின்றன..?
வீழ்ந்த மாணவர்களைத் தூக்கி நிறுத்தும் முகமாக, உளவியல் உள்ளீடுகளோடு அவர்களது மனநிலை மாற்றி அமைக்கப்படுகிறது. பின்பு அவர்களுக்குப் பேச்சுமுறை ஆங்கிலம் போதிக்கப்படுகிறது, கணினி அதன் அடிப்படை , வன்பொருள் அறிவு, இது சமூக கல்லூரிகளின் கட்டாயப் பாடம். ஆண், பெண் பிரிவுகளுக்கேற்ப விருப்பப் பாடங்கள்.
அவையாவன:
1. ஃப்ரிட்ஜ், செல்ஃபோன் , குளிர்சாதனம், கார் - இவற்றிற்கான பழுது பார்க்கும் அறிவைத் தரும் கல்வி.
2. நர்ஸிங்.
3. டேலி
4. போட்டோஷாப், டி.டி.பி.,போன்ற உடனடி வேலை வாய்ப்புள்ள பயிற்சிகள்.
இவை அல்லாது தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பலகலைக்கழகம் ஆகியவை இன்னும் நிறைய தொழிற்கல்வி பயிற்சி படிப்புகளையும் , டிப்ளமோ பட்டப் படிப்புகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது மகிழ்ச்சியான விஷயம்.
5. இவற்றோடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்புகளைப் போதிக்கும் கல்லூரிகளும் உண்டு.
சமுதாயக் கல்லூரிகள் இவ்வகையில் செயல்பட்டு மாணவர்களின் உள்ளத்தில் நம்பிக்கை ஒளியேற்றிய பிறகு மீண்டும் அமைப்புமுறை சார்ந்த கல்லூரிக்குத் திரும்ப வந்து சாதித்த மாணவர்கள் ஏராளம். தமிழகத்தின் எல்லாப் பெருநகரம், மாவட்டத் தலைநகர், சிற்றூர்கள் எனச் சமுதாயக் கல்லூரிகள் உள்ளன. கல்வியில் தோல்வி வாழ்வின் தோல்வி அல்ல. உங்களுக்குத் தெரிந்த தோல்வி அடைந்தோரைச் சமுதாயக் கல்லூரியின் திசைக்கு அனுப்புங்கள்.
வெற்றியாளர்களாய் மாற்றலாம்.
சமுதாய கல்லூரி பற்றி இன்னும் அறிய..
Director,
Madras centre for Research and Development of Community Education (MCRDCE),
Taylors road, Kilpauk, Chennai.
Sep 19, 2009
* Do not use semicolon(;)