- செந்தில்நாதன், பெங்களூரு
உடல்கள் உறுப்புகளாகக்
கிடைக்கும் அதிசயங்கள்
நிகழப் போகின்றன..!
குருதி பெருகி வடிந்து
பச்சை பசும் புல் தரை
செவ்வரத்தம் பூக்கள் போலாகப் போகின்றது.
மலக் குழிக்குள் பதுங்கியிருக்கும் ஈக்கள்
இரட்டைச் சிறகு முளைத்துப் பறந்து
மொய்க்கப் போகின்றன.
இன்னும்
மல்லிகை மணம் கசியும் காற்று
பிணநெடி சுமந்து வீசப் போகின்றது.
அழும் குரல்கள் கணப் பொழுதில்
ஓய்ந்துவிடப் போகின்றன.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக
காவல் துறை அறிவிக்கும்.
அவசர உதவி ஊர்திகள்
அலறிச் செல்லும்.
அன்னிய சக்திகளின் சதி என்று
உள்துறை அமைச்சர் சொல்லுவார்.
அமைதியைக் கெடுக்கச் சதி
என்று முதல்வர் அறிக்கை விடுவார்.
ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் பொழுதும்
இவற்றைத் தவிர பெரிதாக
என்ன நிகழ்ந்துவிடப் போகிறது..?
வேறொரு நாளில்
வேறோர் இடத்தில்
குண்டு வெடிக்கும்
என்பதைத் தவிர.
========================
ஓவியம்: 'டிஜிட்டல்' சீனிவாசன்
Sep 10, 2009
* Do not use semicolon(;)