அன்றாடம் நாட்டில்...
கடித்து ரத்தம் குடித்து
திறமையாகத் தப்பிவிட்டது
ஒரு தீவிரவாதக் கொசு.
இனி
அப்பாவிக் கொசுக்கள்
எத்தனை
அடிபட்டுச் சாகப் போகின்றனவோ!
***************************
குடங்களுடன் ஓடினர்
நனைத்த மழையைச் சபித்தபடி.
வீதியில் தண்ணீர் லாரி.
***************************
பயணச் சீட்டு வாங்காதோருக்கான
தண்டனை அறிவிப்பு வாசகத்தின் மீது
தைரியமாய் அமர்ந்து
பயணித்துக்கொண்டிருக்கிறது ஒரு
வண்ணத்துப்பூச்சி.
***************************
விதவையின் கூந்தலாய்
கிராமத்துச் சாலை.
பூச்சூட்டிக்கொண்டே போகிறது
ஒரு பிணம்.
***************************
கூவிக் கூவித்
தண்ணீர் விற்கிறான்
அந்தச் சிறுவன்
வயிற்றுத் தீ அணைக்க.
***************************
குரங்குக் குட்டி
கூத்தாட்டும் சிறுவன்
யாருக்கு இரக்கப்பட?
Sep 22, 2009
* Do not use semicolon(;)