பாகம்பிரியாள்
அன்பு கொண்ட புதிதில் அரைநொடியும் இனித்தது
அழகாய் அதைப் பரிமாறிக் கொண்டதில்!
இன்றோ ஆறு நாட்களும் ஓயா வேலை.
அழகிய விழி சொன்ன அபிநயம் என்ன என்று பார்ப்பதற்குள்
அலுவலக வண்டி என்னை அள்ளிச் சென்று விடுகிறது.
வேலை உன்னைப் பகலிலும்
என்னை இரவிலும் ஒளித்து வைத்து
ஓயாமல் கண்ணாமூச்சி ஆடுகிறது.
உனைத் தேடி நான் வரும் பொழுது, உணவு மேஜையில்
ஒரு மெழுகுவர்த்தி மட்டுமே என் வருகைக்காய் உருகும் அவலம்!
எனக்காக நீ காத்திருந்து அலுத்து, என் நினைவுகளோடு
உறக்கத்தையும் தேடிக்கொண்டு தவிப்பது எனக்கும் தெரியும்.
அத்திப் பூத்தாற்போல் கிடைக்கும் தனிமையின் ஊடே
ஆரவாரமாய் உறவுகள் நுழையும் போதெல்லாம் நீ
என் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாய்! என்ன செய்ய?
ஏழாம் நாளுக்குத் தள்ளப்பட்டதால் நம்மைப் போலவே
ஏக்கமாய்க் காத்திருக்கிறது நம் காதலும் - ஞாயிறு வரை!
================
ஓவியம்: ஏபி.ஸ்ரீதர்
Sep 17, 2009
* Do not use semicolon(;)