தரமான தமிழ்ப் படங்களைத் தயாரித்து வரும் மோசர்பியர் நிறுவனத்தின் இன்னொரு படைப்பு 'அவள் பெயர் தமிழரசி'. ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், புதுமுகம் நந்தகி கதாநாயகியாக நடிக்கிறார்.
கதாநாயகியின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசிப்பவர்களுக்கு ஒரு செய்தி, நாயகியின் இயற்பெயர் நந்தகி அல்ல; இந்தப் படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் வைத்த பெயரே நந்தகி. நந்தகி என்றால் பெண் சங்கு என்று பொருளாம். மேலும் நடிகை நந்திதாதாஸின் நடிப்பு தனக்கு பிடிக்கும் என்பதாலும் அந்தச் சாயலிலேயே ஒரு பெயரைச் சிந்தித்ததாலும் இந்தப் பெயரை வைத்துள்ளார்.
'அவள் பெயர் தமிழரசி' படத்தின் கதையை எட்டு வருடமாக யோசித்து யோசித்து உருவாக்கிய மீரா கதிரவன், அதே போல திரைக்கதையையும் துல்லியமாக அமைத்திருந்தாராம். இதன் மூலம் மோசர்பியர் நிறுவன அதிகாரி தனஞ்செயனுக்குப் பிடித்துப் போக, இந்தக் கதையைப் படமாக எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அவ்வாறு ஒப்புக்கொண்ட தனஞ்செயனிடம் மீரா கதிரவன் விடுத்த வேண்டுகோள், "கதையில் எந்தச் சமரசமும் நான் செய்ய மாட்டேன்; எவருடைய தலையீடும் கதையில் இருக்கக் கூடாது" என்பது தான். இந்த வேண்டுகோளை ஏற்றதோடு மட்டும் அல்லாமல் அதை நிறைவேற்றியும் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
மேலும் தனஞ்செயன் படத்தைப் பற்றி பேசியபோது "படம் வெளிவருவதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்துகொள்வதால் இதை யாரும் கலைப் படம் என்று எண்ண வேண்டாம். இதை ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு ஜனரஞ்சகப் படமாகவும் இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கியுள்ளார்" என்றார்.
Nov 03, 2009
* Do not use semicolon(;)