ஒரு பெண்ணைக் காதலித்து அதில் தோல்வி அடைந்தால், அதற்கு நிவாரணம் மற்றொரு காதல் தான் என்ற கருத்தை இனிக்க இனிக்கச் சொல்லியிருக்கிறது 'சொல்ல சொல்ல இனிக்கும்'.
நண்பர்கள் அபிநய், சத்யனுடன் வெட்டி அரட்டை அடிக்கும் நாயகன் நவ்தீப், காதலில் பல தோல்விகளைக் கண்டாலும் மனம் தளராமல் அடுத்த காதலுக்குப் போகிற கதாபாத்திரம். முதலில் ஒரு பெண்ணைப் பார்த்து அவரிடம் காதல் வயப்படுகிறார். ஆனால் அவரோ உன்னை நண்பனாகத்தான் நினைத்தேன் என்று ஒதுங்க, அடுத்த பெண்ணிடம் தன் மனத்தை ஒதுக்கிக் காதல் சொல்கிறார். அந்தப் பெண்ணோ நீ எனக்கு ஆண் நண்பன் மட்டும் தான். திருமணம் எல்லாம் வேறு ஒருவருடன் என்று கூற, வெறுத்துப் போகிறார் நவ்தீப்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வருகிறார் மதுமிதா. இவர் தான் நவ்தீப்பின் ஜோடி போலிருக்கிறது என்று ரசிகர்கள் நினைக்கும் நேரத்தில், நவ்தீப்பின் நண்பனான அபிநயைக் காதலிப்பதாக நவ்தீப்பிடமே சொல்லும் காட்சி, நவ்தீப்பை மட்டும் அல்ல; ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்கிறது.
அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் நவ்தீப்பிற்குக் காத்திருக்கிறது, ஓர் இன்ப அதிர்ச்சி. வருகிறார் மல்லிகா கபூர். இவரையும் காதலிக்கத் தொடங்கும் நவ்தீப்பிற்கு இந்த முறை வெற்றி கிடைத்து விடுகிறது. மல்லிகா கபூர், நவ்தீப்பைக் காதலிக்க தொடங்குகிறார். ஆனால் இந்தக் காதலுக்கும் மதுமிதா மூலம் பிரச்சனை வருகிறது. இதற்கிடையில் தன் முன்னாள் காதலியைத் தன் நண்பனே காதலித்து ஏமாற்றுகிற போது அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கப் போராடுகிறார்.
இந்தக் கதாபாத்திரங்களுக்கு நடுவில் பத்ரி என்ற பாத்திரத்தில் அட்டகாசமாக வருகிறார் பிரகாஷ் ராஜ். தனக்கு யாரவது மாலை போட்டு எதையாவது கேட்டுவிட்டால் போதும். அந்த நேரத்தில் இருந்து அதைத் தன் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்காகப் போராடும் ஒரு குணம் கொண்டவராக இருக்கும் பிரகாஷ் ராஜ், நவ்தீப்பின் விஷயத்தில் தலையிடுகிறார்.
ஏன் பிரகாஷ்ராஜ், நவ்தீப் பிரச்சினையில் நுழைகிறார்? தன் நண்பனின் காதலியை அவருடன் சேர்த்து வைத்தாரா, தன் காதலியுடன் நவ்தீப் சேர்ந்தாரா என்பதை இளமை கொஞ்சச் சொல்லிச் சொல்லி இனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் முரளி அப்பாஸ்.
நவ்தீப் நடிப்பு, நடனம், சண்டை என அமர்க்களப்படுத்தியிருக்கிறார். காதலில் தோல்வி அடைந்ததும் அவர் காட்டும் சோகமும் அதே சமயம் வேறு ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவர் காட்டும் உற்சாகமும் ஒரு இளமை திருவிழாவாக உள்ளது. அமைதியாக இருக்கும் அபிநய், திடீர் வில்லனாகி திக்குமுக்காடவைக்கிறார்.
சத்யனின் நகைச்சுவையில் சிரிப்பை விட, சில இடங்களில் வலிதான் அதிகமாக இருக்கிறது; அவர் கடிப்பதைக் குறைத்திருக்கலாம்.
சுஜாவுக்காக நவ்தீப் ஏங்குவது கொஞ்சம் அதிகம் தான். மூலதனம் அதிகமாக இல்லாதது தான் இதற்குக் காரணம் போலிருக்கிறது. மதுமிதா கதாநாயகியாக வந்து, நாயகனின் நண்பனின் காதலியாகிறார். தமிழ்ப் படங்களில் ஒரு நாயகி இருந்தாலே அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு குறைவுதான். இதில் கடைசியாக வருகிறார் மல்லிகா கபூர்.
சென்னையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்கள் போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுகிறதோ இல்லையோ, திரைத் துறையினருக்கு நன்றாகாவே பயன்படுகின்றன. அதை உணர்த்தும் வகையில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், 'காதல் ஒரு பள்ளிக்கூடம்...' என்ற பாடலை முழுக்க முழுக்கச் சென்னையில் உள்ள மேம்பாலங்களில் வைத்துப் பளிச்சென்று படம் பிடித்திருக்கிறார். பரத்வாஜ் இசையில், 'முள்ளே முள்ளே காதல் முள்ளே...' பாடல், திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கும்.
படத்தில் சில இடங்களில் திகட்டச் செய்தாலும் முடிவு என்னவோ இனிக்கத்தான் செய்கிறது.
ஜெ. சுகுமார்.
Sep 30, 2009
* Do not use semicolon(;)