'அயன்' என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு சூர்யா நடித்த படம்; 'தசாவதாரம்' என்ற மாபெரும் படத்திற்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படம்; 'குருவி' என்ற தோல்விப் படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம். இத்தனை எதிர்பார்ப்புகளையும் கொண்ட படமாக வெளிவந்திருக்கிறது 'ஆதவன்'
பணத்திற்காகக் கொலை செய்யும் கூலிப் படையைச் சேர்ந்தவர் சூர்யா, ஆள் எங்கிருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் சரி; இவரின் குறி தப்பாது. கொலை செய்வதில் அப்படி ஒரு வல்லமை படைத்தவர்.
குழந்தைகளைக் கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்கும் ஒரு கும்பலைப் பற்றிக் கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அதற்கு தலைவராக வரும் நீதிபதி பரத்முரளியைக் கொலை செய்ய வில்லனால் விலை பேசப்படும் சூர்யா, பரத்முரளியின் மீது வைத்த குறி தப்ப, வில்லன் கூட்டம் சூர்யாவின் கூட்டத்தை மிரட்டுகிறது.
இதனால் பொங்கி எழும் சூர்யா, இன்னும் பத்து நாட்களில் அந்த நீதிபதியைக் கொல்வேன் என்று சபதம் செய்கிறார். சபதத்தைக் காப்பாற்ற பரத்முரளியின் வேலைக்காரராக இருக்கும் வடிவேலுவின் உதவியுடன் பரத்முரளியின் வீட்டுக்குள் நுழைகிறார் சூர்யா. பிறகு அங்கே இருக்கும் நடிகை சரோஜா தேவி, நயன்தாரா உட்பட அனைவரும் சூர்யாவிடம் அன்பு மழை பொழிய, அதில் நனையும் சூர்யாவுக்கு ஓர் உண்மை தெரிகிறது. அது என்ன உண்மை, பரத்முரளியைச் சூர்யா கொன்றாரா, இல்லையா என்பது தான் கதை.
கே.எஸ்.ரவிகுமாரின் முந்தைய படங்களில் இருக்கும் பல காட்சிகளுக்கு இப்படத்தின் மூலம் பாலிஷ் போட்டிருக்கிறார்கள். ரமேஷ் கண்ணா கூறிய காட்சிகளைக் கதையாக நினைத்துக்கொண்டு படத்தைத் தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
படத்திற்குப் பலமே வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தான். ரமேஷ் கண்ணா கதை எழுதியதால் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்திருப்பார் போலிருக்கிறது. படத்திற்குத் தேவையே இல்லாத ஒரு வேடம் அவருக்கு.
நயன்தாரா எப்போதும் போல பாடல் காட்சிகளுக்கு நடனம் ஆடுவதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. பரத்முரளியின் கதாபாத்திரத்தைத் தவிர வில்லனாக வரும் சாயாஜி ஷிண்டே, ஆனந்த்பாபு, சரோஜா தேவி போன்றவர்களின் வேடம் மனத்தில் நிற்கவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜ் என்ற பெயர் ஒன்றே போதும்; பாடல்கள் எதற்கு என்று எண்ணிய இசையமைப்பாளர், 'அசிலி பிசிலி...' என்ற புரியாத வார்த்தைகளைப் பாடல்களாகக் கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரா.கணேஷ், படத்தொகுப்பாளர் டான்மேக்ஸ், சண்டைப் பயிற்சியாளர் பிரான்ஸ் ஆகியோர் தங்களது பணியைத் திறம்பட செய்திருக்கிறார்கள். இன்னொரு சண்டைப் பயிற்சியாளரான 'கனல்' கண்ணனின் சண்டை அமைப்பு, சொல்லும் படியாக இல்லை.
'அயன்' படத்தில் நடித்த சூர்யா, அதில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்று தெரிகிறது. அதே பாணியை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்.
ஜனரஞ்சகமான படமாக இருந்தாலும் அதில் சில புதுமைகளை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறான் 'ஆதவன்' .
ஜெ.சுகுமார்.
Oct 21, 2009
* Do not use semicolon(;)