நாயகன், நாயகிக்கு வரும் பேருந்துக் காதலைப் போல படம் பார்ப்பவர்களுக்கும் பேருந்துப் பயணத்தின் மீது ஒரு காதலை வர வைத்திருக்கிறது இந்த 'மதுரை தேனி : வழி ஆண்டிப்பட்டி'
மதுரையில் இருக்கும் கதாநாயகன் அரவிந்த் வினோத், வாத்தியார் வேலைக்காக மதுரையிலிருந்து தேனி செல்லும் பேருந்தில் செல்ல, அதே பேருந்தில் செல்லும் நாயகியிடம் காதல் கொள்கிறார். அதோடு நாயகி இறங்கும் ஊரில் இறங்கும் அரவிந்த் வினோத், நாயகியின் பெற்றோரிடமே சென்று பெண் கேட்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளையும் அதற்குக் கதாநாயகன் எடுக்கும் முடிவையும் சுபமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரே நாளில் நடக்கும் கதையை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் சொல்வதற்கு இயக்குநர் ரதிபாலா பெரிதும் பாடுபட்டிருக்கிறார். எதார்த்தமான கதையைச் சொல்லி, ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளிக்கொள்ளும் இயக்குநர்களின் இடத்தில் இவருக்கும் ஒரு இடம் உண்டு.
வாத்தியாராக இருந்தாலும் நண்பர்களின் காதலுக்கு வக்காலத்து வாங்குபவராக அறிமுகம் ஆகிறார் நாயகன். படத்தின் முதல் பாதி முழுவதும் பேருந்தில் நடக்கிறது. சில இடங்களில் பேருந்தின் வேகம் குறைவாக இருப்பதால் எப்போடா இந்த வண்டி நிற்கும் என்று ரசிகர்களுக்கு உணர்வு ஏற்பட்டாலும். பேருந்தை விட்டு இறங்கியதும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.
அரவிந்த் வினோத்க்கு இந்தப் படத்தில் கதாபாத்திர பெயர் இல்லையென்றாலும் இதில் நடித்ததன் மூலம் ரசிகளிடையே நல்ல பெயர் வாங்கியுள்ளார். மதுரைத் தமிழ் பேசுவதில் மல்லுக்கட்டி ஜெயித்திருக்கும் அரவிந்த் வினோத், காதலிச்சா மட்டும் போதாது; அதனால் ஏற்படும் பிரச்சினையை எதிர்க்கொள்ளத் தைரியமும் இருக்க வேண்டும் என்று தன் நண்பனுக்கு அறிவுரை கூறும்போதும் சரி; தன் காதலியின் பெற்றோர்களிடம் சென்று பெண் கேட்பதிலும் சரி; காட்சிகளை உணர்ந்து நடித்திருக்கிறார்.
அப்பா பக்கத்தில் இருந்தாலும் கண்களினால் தன் காதலை வெளிப்படுத்துகிறார் நாயகி ஸ்ரித்திகா. பொறுமையாக நடித்திருக்கும் இவர், படத்தின் இறுதிக் காட்சியில் பேசும் வசனத்திற்குத் திரையரங்கமே அதிர்கிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று தனி நடிகர்கள் இல்லை என்றாலும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் சிரிப்பொலியைச் சிதற வைத்திருக்கிறது. வசனம் எழுதிய சுளிப்பட்டி சிவாஜி, ரதி பாலா அவர்களுக்கு ஒரு தனி பாராட்டு.
சில முகங்களைத் தவிர மற்றவர்கள் மதுரையைச் சார்ந்தவர்கள் போலிருக்கிறது. வசனத்தை வார்த்தைகளாக அல்லாமல் நடிப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
டிஜிட்டல் கேமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட உணர்வே இல்லாத வகையில் ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ் குகன் காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் ஜேவியின் துள்ளல் இசையும் ரசிகர்களைத் துள்ள வைத்துள்ளது.
'மதுரை தேனி : வழி ஆண்டிப்பட்டி' கூட்டம் உள்ள பேருந்தாக வலம் வரும்.
ஜெ. சுகுமார்
Sep 25, 2009
* Do not use semicolon(;)