சென்னை, மே 17 (டிஎன்எஸ்)
2009 மக்களவைத் தேர்தலில் தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். நெப்போலியன், ரித்தீஷ் ஆகிய இந்த நடிகர்கள் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள்.
நடிகர் து. நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.கே.பாலசுப்பிரமணியனை 77,604 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இன்னொரு நடிகரான ஜே.கே. ரித்தீஷ், ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வ.சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வித்தியாசத்திலும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான க.திருநாவுக்கரசரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்தார்.
நெப்போலியன், 1998இல் கலைமாமணி விருது பெற்றார். 2008இல் முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருதினைப் பெற்றார். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் 2001இல் வென்ற இவர், 2006இல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆயினும் சக நடிகர் எஸ்.வி. சேகரிடம் தோற்றார். அண்மையில் வட்டாரம், போக்கிரி, தசாவதாரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ரித்தீஷ், கானல் நீர் என்ற படத்தில் முதலில் நடித்தார். இந்தப் படம் வெற்றியடையாத போதும் அடுத்து, நாயகன் என்ற படத்தில் நடித்துப் பிரபலம் ஆனார்.
நெப்போலியன், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்; ரித்தீஷ், தமிழக அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
(டிஎன்எஸ்)
May 17, 2009
* Do not use semicolon(;)